மன்னம்பிட்டி தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது; காரணம் வெளியானது!
பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை (18) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தேவாலயத்தின் மத போதகர் உடனான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தேவாலயத்தின் உள்ளே எவரும் இருக்கவில்லை என்றும், யன்னல் கண்ணாடிகள் மீதே துப்பாக்கி ரவைகள் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.