புயல் ஏற்படும் அபாயம்... வானிலை தொடர்பில்  சிவப்பு அறிவிப்பு!

அப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 3, 2023 - 17:43
புயல் ஏற்படும் அபாயம்... வானிலை தொடர்பில்  சிவப்பு அறிவிப்பு!

கடும் காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவிப்பை இன்று (03) வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, தென்மேற்கு வங்கக் கடலின் ஆழம் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் பயணிக்கும் மீனவ சமூகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி கடல் பரப்பிற்கு  அண்டிய ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று (03) 11.4° வடக்கு அகலாங்கு மற்றும் 82.5° கிழக்கு நெடுங்கோடு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே சுமார் 325 கி.மீ தொலைவில் சூறாவளியாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புக்களில் பயணிக்க வேண்டாம் என மீனவ சமூகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மேலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அந்த பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும், சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!