துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழப்பு
தலவத்துகொடையில் நேற்று (ஜூலை 20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர், தலவத்துகொட வெலி பாறை பகுதியில் அமைந்துள்ள, பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமானது என நம்பப்படும் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 41 வயதுடைய நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற குற்றவாளிகளை கைது செய்ய தலங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.