உயர்தர பரீட்சை அட்டவணையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
உயர்தர பரீட்சை அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பரீட்சார்திகள் அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்,
"இந்த முறை ஒரு புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. கொரிய மொழி. அந்த பாடத்தை சேர்க்க, அட்டவணையில் சில சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. எனவே, முந்தைய அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,
ஏனெனில் சில வலைத்தளங்கள் இந்த அட்டவணையைக் காட்டக்கூடும். பரீட்சார்திகளின் வசதிக்காக இந்த அட்டவணையை பரீட்சை அனுமதி அட்டையில் இணைத்துள்ளோம். அதனால், வேறு எங்கும் அட்டவணையை தேட வேண்டிய தேவையில்லை” என்று கூறியுள்ளார்.
இதேவேளை, அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளில் அமைந்துள்ள உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு பதிலாக மாற்று பாடசாலைகளை தயார்படுத்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம், கெக்கிராவ, பொலன்னறுவை, பசறை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹசலக்க ஆகிய பிரதேசங்களில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
"அனைத்து பரீட்சார்திகளும் கடைசி நிமிடம் வரை காத்திருக்க வேண்டாம். தங்கள் பரீட்சை மையத்திற்கு செல்வதற்கு ஏதேனும் இடையூறு இருக்கிறதா என்று கண்டறியவும். அப்படியானால், அருகிலுள்ள கல்வி வலய அலுவலகம் மற்றும் அனர்த்த முகாமைத்து நிலையத்தின் அவசர உதவி எண்களுக்கு அழைத்து பரீட்சை நிலையத்துக்கு செல்ல தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொள்ளுங்கள்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
