நல்லூரில் அசைவ உணவகம்; பெயர் பலகையை அகற்றிய மாநகர சபை
யாழ்ப்பாணம், நல்லூர் ஆலய வளாகத்தில், திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை, மாநகர சபையினரால் இன்று வியாழக்கிழமை (மே 22) அகற்றப்பட்டுள்ளது.
மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் மாநகர சபை பொது சுகாதார பரிசோதகரினால், யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னதாக, நல்லூர் ஆலய சூழலில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுத்து, கண்டன போராட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
