தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற 500 தெருநாய்கள் கொலை: அதிர்ச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள்

இந்தச் செயல்கள் அந்தந்த கிராம பஞ்சாயத்து தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் இது செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனவரி 14, 2026 - 18:27
ஜனவரி 14, 2026 - 18:30
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற 500 தெருநாய்கள் கொலை: அதிர்ச்சியில் விலங்கு நல ஆர்வலர்கள்

தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பெயரில், கடந்த ஒருவார காலத்தில் பல கிராமங்களில் சுமார் 500 தெருநாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தெருநாய்களுக்கு விஷ ஊசி செலுத்தியும், விஷம் கலந்த உணவு வழங்கியும் இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

காமரெட்டி மாவட்டம் பகுதியில் உள்ள பவானிபேட்டை, பல்வாஞ்சா, ஃபரித்பேட்டை, வாடி மற்றும் பண்டாரமேஷ்வரபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தெருநாய்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதாக, விலங்கு நல ஆர்வலர் அதுலபுரம் கௌதம் (35) ஜனவரி 12 அன்று காவல்துறையில் அளித்த புகாரின் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த இரண்டு முதல் மூன்று நாட்களிலேயே சுமார் 200 நாய்கள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செயல்கள் அந்தந்த கிராம பஞ்சாயத்து தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் இது செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து, ஐந்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நாய்களை கொல்ல பணியமர்த்தப்பட்டதாக கூறப்படும் கிஷோர் பாண்டே உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமங்களின் ஒதுக்குப்புற பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் கால்நடை மருத்துவக் குழுக்கள் அவற்றை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இறப்புக்கான துல்லியமான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட விஷத்தின் தன்மையை கண்டறிய, உள்ளுறுப்பு மாதிரிகள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்னதாக, சில வேட்பாளர்கள் தெருநாய் மற்றும் குரங்கு தொல்லையை ஒழிப்பதாக கிராம மக்களுக்கு உறுதியளித்திருந்ததாகவும், அதனடிப்படையிலேயே தற்போது இந்த கொலைகள் நடைபெறுவதாகவும் விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு முன்பாக, இந்த மாத தொடக்கத்தில் ஜனவரி 6 முதல் 9 வரை ஹனம்கொண்டா மாவட்டம் பகுதியில் உள்ள ஷயம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் சுமார் 300 தெருநாய்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களது கணவர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் சம்பவங்கள், தேர்தல் அரசியலில் வாக்குறுதிகளின் பெயரில் விலங்கு உரிமைகள் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!