இந்தியக் கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பலான தரங்கினி இலங்கைக்கு விஜயம்
இந்தி மொழிச் சொல்லான தரங் என்பதிலிருந்தே தரங்கினி என பெயரிடப்பட்டது. அந்த அடிப்படையில் அலைகளை ஊடறுத்துச் செல்வதே தரங்கினி ஆகும். அத்துடன் உலகைச் சுற்றி வந்த முதல் இந்திய கடற்படைக் கப்பல் என்ற தனித்துவமான பெருமையையும் இந்தக் கப்பல் கொண்டுள்ளது.
நட்புறவின் பாலங்களை கட்டி எழுப்புவதற்கான இந்திய கடற்படையின் முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்தியக் கடற்படைக்கு சொந்தமான பாய்மர பயிற்சிக் கப்பலான ஐ,என்,எஸ் தரங்கினி 2026 பெப்ரவரி 27 முதல் மார்ச் 02 ஆம் திகதி வரை திருகோணமலைக்கும், அதன் பின்னர் 2026 மார்ச் 06-09 வரை கொழும்புக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை கடற்படையைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகளுக்கு துறைமுக மட்ட மற்றும் கடல் மட்ட பயிற்சிகள், கப்பலோட்டல் பயிற்சி மற்றும் அனுபவ பகிர்வுகள் உள்ளிட்டவற்றை இலக்காகக்கொண்டு இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாகபட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை மீளாய்வு 2026 இல் பங்கேற்ற நிலையில் அதன் நிறைவில் இவ்விஜயம் மேற்கொள்ளப்படுவதுடன் கமாண்டர் நிதின் கஜ்ஜார் அவர்களது கட்டளையின் கீழ் குறித்த கப்பல் வழிநடத்தப்படுகின்றது.
இயந்திரங்கள் மற்றும் எரிவாயு மூலம் இயக்கப்படும் கப்பல்கள் நிறைந்த இந்த நவீன யுகத்தில் பாய்மரப் பயிற்சி கப்பல்களை இயக்கும் உலகின் சில கடற்படைகளில் இந்திய கடற்படையும் ஒன்றாக உள்ளது. ஐஎன்எஸ் தரங்கினி உலகப் புகழ்பெற்ற கப்பல் வடிவமைப்பாளரான கொலின் மூடி என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இக்கப்பல் கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் உள்நாட்டிலேயே கட்டப்பட்டதாகும். இரும்பினாலன கப்பல் வெளிப்பாகம், அலுமினிய அடுக்குகள் மற்றும் தேக்கு மரத்தால் அமைக்கப்பட்டதும் நெகிழ்திறன் கொண்டதுமான கப்பல் மேற்பகுதியையும் இக்கப்பல் கொண்டுள்ளது. இக்கப்பலின் நீளம் 54 மீற்றர், எடை 500 தொன்களையும் கொண்டிருக்கும் நிலையில் 10,000 சதுர அடிக்கு மேல் மொத்த பாய்மரப் பரப்பளவையும் 20 பாய்மரங்கள் மற்றும் 200 கயிறுகள் ஆகியவற்றையும் கொண்டிருக்கும் நிலையில் அவற்றின் மொத்த நீளம் 20 கிலோ மீற்றராகும்.
குறித்த பாய்மரக் கப்பல் இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பல்களில் (STS) முதன்மையானது. கொச்சியை தளமாகக் கொண்ட முதல் பயிற்சிப் படையின் அங்கமான இக்கப்பல் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் பயிற்சி அதிகாரிகளுக்கு பாய்மரக் கப்பலோட்டல் பயிற்சி அளிப்பதை முதன்மைப் பணியாக கொன்டுள்ளது. இந்தக் கப்பலில் 07 அதிகாரிகள் மற்றும் 30 மாலுமிகள் உள்ளனர், அத்துடன் ஒரே நேரத்தில் 30 கேடட் அதிகாரிகள் இக்கப்பலில் தங்க முடியும்.
இந்தி மொழிச் சொல்லான தரங் என்பதிலிருந்தே தரங்கினி என பெயரிடப்பட்டது. அந்த அடிப்படையில் அலைகளை ஊடறுத்துச் செல்வதே தரங்கினி ஆகும். அத்துடன் உலகைச் சுற்றி வந்த முதல் இந்திய கடற்படைக் கப்பல் என்ற தனித்துவமான பெருமையையும் இந்தக் கப்பல் கொண்டுள்ளது. 2004 ஆம் ஆண்டில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டதுடன், தரங்கிணி 18 நாடுகளில் உள்ள 37 துறைமுகங்களைச் சுற்றி 35,000 கடல் மைல் தூரம் பயணித்து இச்சாதனையை நிகழ்த்தியது. அத்துடன் 2008 ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியாவை (ஜகார்த்தா, சிங்கப்பூர் மற்றும் பூகெட்) நோக்கி புராதன இந்திய மாலுமிகள் மேற்கொண்ட கடற் பயணங்களை இந்தக் கப்பல் மீண்டும் மேற்கொண்டது, இது இந்தியாவின் உயர்வான கடல்சார் பாரம்பரியம் மற்றும் சமுத்திரங்கள் ஊடான பயணத் திறன்களை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற உயரமான கப்பல்களின் பந்தயங்களை வென்றும் விசாகபட்டினத்தில் நடைபெற்ற 2026 சர்வதேச கடற்படை மீளாய்வு உட்பட பல சர்வதேச கடற்படை மீளாய்வுகளில் பங்கேற்றும், ஐந்து லோகயான் (Lokayan) பயணங்கள் ஊடாகவும் 'நட்பின் பாலங்களை' கட்டியெழுப்புதல்” என்ற இந்திய கடற்படையின் இராஜதந்திர முயற்சிகளைக் குறித்து நிற்கும் கொடிகளை தாங்கிச் செல்லும் கப்பலாக தரங்கிணி திகழ்கின்றது.
இக்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்கும் நிலையில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 03 அதிகாரிகள் மற்றும் 25 பயிற்சி அதிகாரிகள் இணைந்துகொண்டு கப்பலோட்டல் பயிற்சி மற்றும் கொழும்புக்கு பயணிக்கும் போதான கப்பலோட்டல் அனுபவங்களைப் பெறவுள்ளனர். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் இயந்திர மயமான போக்குவரத்து துறைகளால் சூழ்ந்த இன்றைய யுகத்தில், பாய்மரப் பயிற்சி கப்பலில் பயிற்சி பெறுவது, கப்பலோட்ட அடிப்படையை அறியவும், கடல் மற்றும் காற்றின் கூறுகளைப் புரிந்துகொள்ளவும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. அதேவேளை எதிர்கால கடற்படை அதிகாரிகளிடம் துணிச்சல், தோழமை மற்றும் சகிப்புத்தன்மை போன்ற காலத்தால் போற்றப்படும் மதிப்புகளை வளர்க்கும் நிலையில், இது கடற்படையினரின் வாழ்க்கை முறையின் அடித்தளமாக அமைகிறது. இந்திய கடற்படையின் குறித்த கப்பலோட்ட அனுபவம், இலங்கை கடற்படையினரிடையே துறைசார்ந்த ஆர்வத்தை ஊக்குவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.