கராச்சியில் அமெரிக்க துணைத் தூதரகம் மீது தாக்குதல்: 9 பேர் பலி!
ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான ஈரான் ஆதரவு போராட்டக்காரர்கள் கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்.
போராட்டக்காரர்கள் துணைத் தூதரகத்தின் நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைந்து, வரவேற்பு மற்றும் பாதுகாப்பு அறையின் ஜன்னல்களைச் சேதப்படுத்தியுள்ளனர்.
மஜ்லிஸ்-இ-வஹ்தத் முஸ்லிமீன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தூதரகத்திற்குள் இருந்து தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களைக் கலைக்கக் காவல்துறை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது.
இந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, 6 பேர் கொல்லப்பட்டதாகவும் 8 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரி சமி சையத் உறுதிப்படுத்தியிருந்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.
இதன் எதிரொலியாக பாகிஸ்தானின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, கில்கிட் பால்டிஸ்தானில் நடந்த வன்முறைப் போராட்டங்களின் போது ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் எரிக்கப்பட்டுள்ளது.
சிந்து மாகாண உள்துறை அமைச்சர் ஜியாவுல் ஹசன் லஞ்சார், இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைக் கேட்டுள்ளதுடன், சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, மக்கள் அமைதியான முறையில் தங்கள் போராட்டத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். முக்கியமான நிறுவனங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.