வடகிழக்கு அமெரிக்காவில் கடும் குளிர்கால புயல் எச்சரிக்கை: 1,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
FlightAware என்ற விமான கண்காணிப்பு இணையதளத்தின் தகவலின்படி, டிசம்பர் 26, 2025 (வெள்ளிக்கிழமை) மதியம் 12.30 மணி நிலவரப்படி 1,139 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 3,808 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
வடகிழக்கு அமெரிக்காவில் நிலவும் கடும் குளிர்கால புயல் எச்சரிக்கைகளால், விடுமுறை கால பயண உச்ச நேரத்தில் அமெரிக்க விமான நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான விமானங்களை ரத்து செய்தும் தாமதப்படுத்தியும் வருகின்றன.
FlightAware என்ற விமான கண்காணிப்பு இணையதளத்தின் தகவலின்படி, டிசம்பர் 26, 2025 (வெள்ளிக்கிழமை) மதியம் 12.30 மணி நிலவரப்படி 1,139 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 3,808 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
தேசிய வானிலை சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று டிசம்பர் 27 (சனிக்கிழமை) காலை வரை கிரேட் லேக்ஸ் பகுதிகளிலிருந்து வடக்கு மிட்-அட்லாண்டிக் மற்றும் தெற்கு நியூ இங்கிலாந்து வரை கடுமையான குளிர்கால புயல் நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையம், லாகார்டியா விமான நிலையம் மற்றும் டிட்ராய்ட் மெட்ரோபாலிடன் வேன் கவுண்டி விமான நிலையம் உள்ளிட்ட பல முக்கிய விமான நிலையங்கள், பயணிகள் தாமதம் மற்றும் ரத்துகளை எதிர்பார்க்கலாம் என X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் எச்சரிக்கை பதிவுகளை வெளியிட்டுள்ளன.
விமான நிறுவனங்களில் ஜெட் ப்ளூ ஏர்வேஸ் அதிகபட்சமாக 225 விமானங்களை ரத்து செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்டா ஏர் லைன்ஸ் 186 விமானங்களையும், ரிபப்ளிக் ஏர்வேஸ் 155 விமானங்களையும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 96 விமானங்களையும், யுனைடெட் ஏர்லைன்ஸ் 82 விமானங்களையும் ரத்து செய்துள்ளன.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், இந்த புயல் காரணமாக பாதிக்கப்படும் பயணிகள் கட்டண மாற்றம் இன்றி தங்கள் பயணத் திட்டங்களை மறுசீரமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை ஜெட் ப்ளூ, டெல்டா, ரிபப்ளிக் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ராய்ட்டர்ஸ் கேட்ட கருத்துகளுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.