‘சரணடையுங்கள், இல்லையெனில் மரணம்!’ – ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை உறுதிப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், அந்த நாட்டுக்கு கடும் பகிரங்க எச்சரிக்கையை விடுத்துள்ளார். “சரணடையுங்கள், இல்லையெனில் மரணத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்” என அவர் நேரடியாக எச்சரித்துள்ளார்.
இது குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானின் புரட்சிகர இஸ்லாமியப் படையினர், ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையை நோக்கி, “உங்கள் ஆயுதங்களைத் துறந்து உடனடியாக சரணடையுங்கள். அவ்வாறு செய்தால் உங்கள் மீதான நடவடிக்கைகள் நிறுத்தப்படும். இல்லாவிட்டால், உறுதியாக மரணத்தை எதிர்கொள்ள நேரிடும்” என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மேலும், ஈரான் தனது அணுசக்தி மையங்களை மீண்டும் கட்டமைப்பதைத் தடுக்கும் நோக்கில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து மேற்கொண்ட இந்த ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ (Operation Epic Fury) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் தொடங்கிய தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் ரோர் ஆஃப் தி லயன்’ (Operation Roar of the Lion) என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல்–அமெரிக்க கூட்டுத் தாக்குதல், ஈரானின் முக்கிய அரசு கட்டிடங்கள் மற்றும் இராணுவ நிலைகளைக் குறிவைத்து நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அதிகாரபூர்வ அலுவலகமும் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அதிருப்தியை ட்ரம்ப் வெளிப்படுத்திய சில நாட்களிலேயே இந்த இராணுவ நடவடிக்கை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டேன் என உறுதியளிக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் முக்கிய நிபந்தனையாக உள்ளது.
இந்த தாக்குதலை ட்ரம்ப் புகழ்ந்தும் பேசியுள்ளார். “அமெரிக்கர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை முற்றிலும் துடைத்தெறியும் நடவடிக்கை இது. ஈரான் மீண்டும் கட்டமைக்கும் அணு ஆயுத மையங்களை அழிப்பதே எங்களின் திட்டம். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது” என அவர் கூறியுள்ளார்.
மேலும், ஈரான் மக்களுக்கான ஒரு செய்தியையும் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். “சக்திவாய்ந்த ஈரானிய மக்களே, இன்றிரவு நீங்கள் விரும்பிய சுதந்திரம் உங்கள் கைகளில் கிடைக்கும். அதுவரை பாதுகாப்பாக இருங்கள். வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம். வெளியே மிகுந்த ஆபத்து உள்ளது. குண்டுகள் எங்கு வேண்டுமானாலும் விழக்கூடும். அனைத்தும் முடிந்த பின், உங்களுக்கான அரசை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். அந்தத் தீர்மானம் முழுமையாக உங்களிடமே உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.