வைரலாகும் ஏஐ 80ஸ் ட்ரெண்ட்: பின்னணியில் மறைந்திருக்கும் பேரதிர்ச்சி - எச்சரிக்கும் பகீர் ஆய்வு அறிக்கை!

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஏஐ 80ஸ் புகைப்பட மோகத்தின் பின்னணியில் மாபெரும் சுற்றுச்சூழல் அழிவு ஒளிந்திருப்பதாக ஐநா மற்றும் ஆய்வாளர்கள் பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வைரலாகும் ஏஐ 80ஸ் ட்ரெண்ட்: பின்னணியில் மறைந்திருக்கும் பேரதிர்ச்சி - எச்சரிக்கும் பகீர் ஆய்வு அறிக்கை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் தற்போது 80ஸ் ஏஐ (AI 80s Trend) புகைப்படங்களை உருவாக்கி பதிவிடும் மோகம் காட்டுத்தீயாய் பரவி வருகின்றது. ஜென்-ஸி முதல் மில்லினியல்கள் வரை அனைவரும் இந்த மாயாஜால ட்ரெண்டில் மூழ்கியிருக்கின்றனர். 

ஒரு சில வினாடிகளில் பழைய விண்டேஜ் தோற்றத்திற்கு மாறும் புகைப்படங்கள் கண்ணுக்கு அழகாகத் தெரிந்தாலும், இதன் பின்னணியில் பூமி சந்திக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

செயற்கை நுண்ணறிவு  என்பது வெறும் டிஜிட்டல் மென்பொருள் மட்டுமல்ல; சக்திவாய்ந்த தரவு மையங்கள், அதிவேக கணினி சில்லுகள் மற்றும் பிரம்மாண்ட குளிரூட்டும் அமைப்புகளைக் கொண்ட ஒரு மாபெரும் இயற்பியல் கட்டமைப்பு ஆகும். 

ஐக்கிய நாடுகளின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கான பல்கலைக்கழக நிறுவனம் (UNU-INWEH) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2030-ஆம் ஆண்டிற்குள் ஏஐ பயன்பாட்டிற்கான தரவு மையங்களின் தண்ணீர் தேவை, சுமார் 130 கோடி இந்திய மக்கள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவை மிஞ்சிவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் நாம் ஒரு ஏஐ படத்தை உருவாக்கும் போது, அதன் பின்னணியில் உள்ள தரவு மையங்களில் அதிவேக செயலிகள் இயங்கி பெரும் வெப்பத்தை வெளியிடுகின்றன. கார்னகி மெல்லன் பல்கலைக்கழகம் மற்றும் ஹக்கிங் பேஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், ஒரு ஏஐ படத்தை உருவாக்க 0.01 முதல் 0.29 கிலோவாட் மின்சாரம் செலவாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

உலகளவில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் பலமுறை படங்களை உருவாக்கும் போது, மின்சார நுகர்வு விஸ்வரூபம் எடுக்கின்றது. அமெரிக்காவின் எம்ஐடி (MIT) ஆய்வின்படி, தரவு மையங்களின் மின்சாரத் தேவை சில ஆண்டுகளிலேயே இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

மின்சாரத்தைத் தாண்டி, கண்களுக்குத் தெரியாத மறைமுக நீர் நுகர்வு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தரவு மையங்களின் வெப்பத்தைத் தணிக்க பிரம்மாண்ட குளிரூட்டும் அமைப்புகளுக்குத் தண்ணீர் அத்தியாவசியமாகிறது. 

கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வின்படி, சாட்ஜிபிடியில் வெறும் 20 முதல் 50 உரையாடல்களுக்கு சுமார் 500 மில்லி லீட்டர் தண்ணீர் வரை செலவாகின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால், கோடிக்கணக்கான உயர்தர ஏஐ படங்களை உருவாக்கும் போது செலவிடப்படும் நன்னீரின் அளவு கற்பனைக்கும் எட்டாத ஒன்றாக உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் படைப்பாற்றலுக்கு ஏஐ ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும், தேவையில்லாத வைரல் ட்ரெண்டுகளுக்காக இயற்கையைச் சுரண்டுவதும், தனிப்பட்ட புகைப்படங்களின் தரவுகளைப் பொதுவெளியில் விடுவதும் நீண்ட கால பாதிப்புகளை உருவாக்கும். பொழுதுபோக்கிற்காக நாம் செய்யும் சிறிய செயல்கள் கூட புவி வெப்பமயமாதலுக்கும் நீர் பற்றாக்குறைக்கும் வித்திடக்கூடும் என்பதால், ஏஐ தொழில்நுட்பப் பயன்பாட்டில் ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாடுடன் இருப்பது காலத்தின் கட்டாயமாகும்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT