இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்த இளம் பெண் யாழில் கடத்தல்
பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, இளவாலை சந்திக்கு அருகில் நேற்று புதன்கிழமை ( மே 21 ) இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர்.
பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தாலும், இருவரும் சேர்ந்து வாழ உறுதியாக இருந்த நிலையில் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பெண் வீட்டார் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தொடுத்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரும் விருப்பம் போல சேர்ந்து வாழலாம் என தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, வழக்கு நிறைவடைந்து வரும்போது பிற்பகல் 4.37 மணியளவில் பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிஸார் இளம் பெண்யை தேடும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.