உலகையே உலுக்கிய சோகம்: தண்ணீர் கிடைக்காமல் சகாரா பாலைவனத்தில் 49 பேர் துடிதுடித்து மரணம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவனப் பகுதியில், நெஞ்சை உலுக்கும் கொடூரமான துயரச் சம்பவம் ஒன்று அரங்கேறி, ஒட்டுமொத்த உலகையுமே உறைந்துபோகச் செய்துள்ளது.
மாலி நாட்டில் நடைபெற்ற ஒரு மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, லாரி ஒன்றில் தாயகம் திரும்பிக்கொண்டிருந்த பயணிகள், நைஜர்-அல்ஜீரியா எல்லைக்கு அருகே உள்ள 'அசமகா' பகுதிக்கு வந்தபோது, எதிர்பாராதவிதமாக லாரி பழுதடைந்து பாலைவன மணலில் சிக்கிக்கொண்டது.
ஓட்டுநரும் பயணிகளும் எவ்வளவு போராடியும் வாகனத்தைச் சரிசெய்ய முடியாத நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த அத்தியாவசிய உணவும் குடிநீரும் தீர்ந்துபோயின.
இதனால், மாற்று உதவியும் கிடைக்காமல், சகாரா பாலைவனத்தின் கொளுத்தும் கத்தரி வெயிலில் தாகத்தாலும், கடும் வெப்பத்தாலும் துடிதுடித்து பரிதாபமாக 49 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தக் கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இரண்டு பயணிகள் மட்டும், தங்களின் தாகத்தையும் வெயிலையும் தாங்கிக்கொண்டு சுமார் 50 கிலோமீட்டருக்கும் மேல் பாலைவன மணலில் நடந்து சென்று ஒரு நீர்நிலையைக் கண்டுபிடித்து உயிரைக் காத்துக் கொண்டதுடன், இந்தத் துயரச் செய்தியை அதிகாரிகளிடம் கொண்டு சேர்த்தனர்.
மீட்கப்பட்ட 49 பேரின் உடல்களும் அங்கேயே ஒரு பொதுப் புதைகுழியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக நைஜர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம், புலம்பெயர்ந்தோருக்கான மரண வழித்தடத்தின் கொடூரப் பின்னணியைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்து, தற்போது சர்வதேச அளவில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.