நிலுவையில் உள்ள சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடுதல் மீண்டும் தொடக்கம் – இரண்டு வாரங்களில் விநியோகம் முடியும்
ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க முடியும் எனவும், இதில் ஒரு நாள் சேவையின் கீழ் 1,500 பத்திரங்களும், சாதாரண சேவையின் கீழ் 4,500 பத்திரங்களும் வழங்கப்படும்.
நாட்டில் சில காலமாக அச்சிட முடியாமல் நிலுவையில் இருந்த சாரதி அனுமதி பத்திரங்களை தயாரிக்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. அச்சு அட்டைகள் இல்லாத காரணத்தால் சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்குவது முன்னர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதற்குப் பதிலாக தற்காலிக அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டு வந்தன.
தற்போது அச்சிடத் தேவையான அட்டைகள் கிடைப்பதனால், சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் சாரதி அனுமதி பத்திரங்கள் தயாரிக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணி மூன்று மையங்களில் மேற்கொள்ளப்படுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். வேரஹெரவில் உள்ள திணைக்களத்துடன், ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுர மையங்களிலும் அச்சுப்பணி நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு நாளும் சுமார் 6,000 சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க முடியும் எனவும், இதில் ஒரு நாள் சேவையின் கீழ் 1,500 பத்திரங்களும், சாதாரண சேவையின் கீழ் 4,500 பத்திரங்களும் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலுவையில் உள்ள அனைத்து சாரதி அனுமதி பத்திரங்களும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அச்சிட்டு வழங்கப்படுமெனவும் ஆணையாளர் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத் தேவைக்காக கூடுதலாக ஒரு மில்லியன் பத்திர அட்டைகளை நாட்டிற்கு இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.