அனர்த்த நிலையால் ஹம்பாந்தோட்டையில் 253 குடும்பங்கள் பாதிப்பு
அனர்த்த நிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் 253 குடும்பங்களைச் சேர்ந்த 891 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் பிரியந்த சுமனசேகர தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி, திஸ்ஸமஹாராம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட எல்லகல, மெதவெலன, சேனபுர, ரபர்வத்த, கெமுனுபுர மற்றும் யோத கண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச்சேர்ந்த மக்கள் அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சூரியவெவ பிரதேச செயலாளர் பிரிவின் மஹகஜதுர மற்றும் ரன்முடுவெவ கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் அம்பலாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவின் லியாங்கஸ்தொட மற்றும் பொலான தெற்கு ஆகிய பிரதேச மக்களும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஹம்பாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவின் பர்ஹியபுர, ஹம்பாந்தோட்டை மேற்கு, ஹம்பாந்தோட்டை கிழக்கு, யஹங்கல கிழக்கு, தம்மன்னாவ, சமோதகம மற்றும் கொன்னொருவ பிரதேசங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, செவனகல பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஏரி ஒன்று உடைந்துள்ளமையினால், சூரியவெவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மஹகல்வெவ கிராம உத்தியோகத்தர் பிரதேசத்தில் உள்ள பல வீடுகள் நீரில் முழ்கியுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.